எத்தனை கோடி (வைத்தீசுரன் கோயில்) திருப்புகழ்
எத்தனை கோடி (வைத்தீசுரன் கோயில்)
(வைத்தீசுரன் கோயில் புள்ளிருக்குவேளூர் என வழங்கப்படும். இறைவன் வைத்தீசுரன் என்னும் வைத்திய நாதப் பெருமான். அம்பாள் தையல்நாயகி. இங்கு முருகனுக்கு முத்துக்குமரன் என்னும் திருநாமம். இத்தலம் மிகவும் பிரசித்தமான பரிகாரத்தலமாகத் திகழ்கிறது.
நாம் எத்தனையோ ஜன்மம் எடுத்து துன்பப்பட்டுவிட்டோம். இனி முருகன் பாதம் அடைந்து அருள் பெற வேண்டும் என நினைப்பவர்கள் இந்த திருப்புகழ் படித்து முருகன் அருள் பெறலாம்.
எத்தனை கோடி கோடி விட்டுட லோடி யாடி
யெத்தனை கோடி போன ...... தளவேதோ
இப்படி மோக போக மிப்படி யாகி யாகி
யிப்படி யாவ தேது ...... இனிமேலோ
சித்திடில் சீசி சீசி குத்திர மாய மாயை
சிக்கினி லாயு மாயு ...... மடியேனைச்
சித்தினி லாட லோடு முத்தமிழ் வாண ரோது
சித்திர ஞான பாத ...... மருள்வாயே
நித்தமு மோது வார்கள் சித்தமெ வீட தாக
நிர்த்தம தாடு மாறு ...... முகவோனே
நிட்கள ரூபர் பாதி பச்சுரு வான மூணு
நெட்டிலை சூல பாணி ...... யருள்பாலா
பைத்தலை நீடு மாயி ரத்தலை மீது பீறு
பத்திர பாத நீல ...... மயில்வீரா
பச்சிள பூக பாளை செய்க்கயல் தாவு வேளூர்
பற்றிய மூவர் தேவர் ...... பெருமாளே.
எத்தனையோ கோடிக்கணக்கான உடல்களை விட்டு, புதுப் புது உடல்களில் ஓடி உட்புகுந்தும், அந்த உடல் கொண்டு ஆடியும், இவ்வாறு மீண்டும் மீண்டும் எத்தனை கோடிப் பிறப்புக்கள் போனதோ? இவ்வாறு மோகமும் போகமும் கலந்து, இப்படி பிறந்து இறந்து மீண்டும் இவ்வாறு பிறந்து ஆவதினால் என்ன பயன்?
இனிமேல் இதைப்பற்றி ஆராய்ந்து பார்த்தால், சீசசீ மிக இழிவானது இந்த மாயமான வாழ்க்கை என்று எண்ணும்படியாகவும் இதன் சிக்கலில் அகப்பட்டு மாய்கின்ற அடியேனை, அறிவு என்னும் மேடையிலே ஆட்டுவித்து, முத்தமிழ்த் துறையிலும் வல்ல புலவர்கள் ஓதுகின்ற உன் அழகிய ஞானத் திருவடிகளை எனக்கு அருள்வாயாக. நாள்தோறும் உன்னைத் துதிப்பவர்களின் உள்ளமே நீ தங்கியுள்ள இருப்பிடமாகக் கொண்டு அதில் நடனமாடிடும் ஆறுமுகத்துக் கடவுளே, உருவமாகவும் அருவமாகவும் உள்ளவரும், பாதி மரகதப் பச்சை நிற உடல் கொண்டவரும், மூன்று நீண்ட இலைகளை உடைய சூலத்தைக் கையில் ஏந்தியவருமான சிவபெருமான் அருளிய புதல்வனே, ஆயிரம் பெரிய படங்கொண்ட தலைகள் வாய்த்த ஆதிசேஷனை கீறிக் கிழிக்கும் வாள் போன்ற கூரிய நகங்களை உடைய நீல மயில் மீது வரும் வீரனே, பசுமையான இளம் கமுக மரத்தின் மடல் மீது வயலில் உள்ள கயல் மீன்கள் தாவுகின்ற புள்ளிருக்கும் வேளூரில்* விருப்புடன் அமரும் முத்தேவர் (பிரம்மா, விஷ்ணு, சிவன்) போற்றும் பெருமாளே.
Comments
Post a Comment