அருள்மிகு எட்டுக்குடி முருகன் கோவில்
அருள்மிகு எட்டுக்குடி முருகன் கோவில்
மாவட்டம் : திருவாரூர்
இடம் : எட்டுக்குடி
முகவரி : நாகப்பட்டினத்திலிருந்து திருத்துறைப்பூண்டி செல்லும் வழியில் 20 கி.மீ. தொலைவில் திருத்தலம் அமைந்துள்ளது.
தாலுகா : திருக்குவளை
வரலாறு : எட்டுக்குடி முருகன் கோவில், தமிழ்நாட்டில் திருவாரூர் மாவட்டத்தில் எட்டுக்குடி என்னும் ஊரில் அமைந்துள்ள புகழ்பெற்ற முருகன் கோவில் ஆகும்.
தல வரலாறு :
தெய்வீகச் சிற்பி என அழைக்கப்படும் ஸ்தபதி, பொரவாச்சேரி எனும் ஊரில் முருகனுக்கு சிலை எழுப்பினார். அச்சிலையின் அழகை கண்ட பரந்த சோழன் அந்த சிற்பியிடம் இனி இதுபோல் இன்னொரு சிலையை செய்யக்கூடாது என்பதற்காக, அந்த சிற்பியின் பெருவிரலை வெட்டிவிட்டான்.
அவன் வருத்தத்துடன் அருகிலுள்ள ஒரு கிராமத்திற்கு வந்தான். பெருவிரல் இல்லாத நிலையிலும் கடுமையான முயற்சி எடுத்து மற்றொரு சிலையை செய்தான். அதை அவ்வூரை ஆண்ட குறுநில மன்னன் முத்தரசன் பார்த்தான். அந்த சிலையிலிருந்து ஒளி வீசியது. வேலை நிறைவு பெற்றதும் சிலைக்கு உயிர் வந்து, முருகன் அமர்ந்திருந்த மயில் பறக்க ஆரம்பித்தது.
மன்னன் அந்நேரத்தில் வர அதை எட்டிப்பிடி என உத்தரவிட்டான். காவலர்கள் மயிலை பிடித்தனர். அதன் கால்களை சிறிதளவு உடைத்தனர். அதன்பின் மயில் சிலையாகி அங்கேயே நின்று கொண்டது. எட்டிப்பிடி என்ற வார்த்தை, தற்போது எட்டுக்குடி ஆனது. அதுவே ஊரின் பெயராகவும் நிலைத்து விட்டது.
தல சிறப்பு :
எல்லாத் தலங்களிலும் தென்புறம் மயிலின் தலைப்பகுதி இருக்கும். ஆனால் இங்கு மட்டும் மயிலின் தலை வலதுபுறமாகத் இருப்பது அதிசயம்.
முருகப் பெருமான் வள்ளி, தெய்வானையுடன் மயில் மீதமர்ந்து காட்சி தருகிறார். இந்த மூவரும் அமர்ந்துள்ள மயில் சிற்பத்துக்கு தரையின் மீதுள்ள ஆதாரம் அதன் இரண்டு கால்கள் மட்டுமே.
பார்க்கும் மனநிலைக்கு ஏற்ப தன் உருவத்தை மாற்றிக்கொண்டு காட்சி தருபவர் எட்டுக்குடி சுப்பிரமணியசுவாமி. குழந்தையாக பார்த்தால் குழந்தையாகவும், இளைஞனாக பார்த்தால் இளைஞனாகவும், முதியவராக பார்த்தால் முதியவராகவும் காட்சி தருகிறார்.
பிரகாரத்தில் முருகனுடன் போருக்கு சென்ற நவ வீரர்களுக்கு சிலை இருக்கிறது. கூத்தாடும் கணபதி, ஜுரதேவர், சீனிவாச சவுந்தராஜப்பெருமாள், ஆஞ்சநேயர், மனோன்மணி அம்மை, ஐயப்பன், மகாலட்சுமி, நவகிரகங்கள், சனிபகவான், பைரவர் ஆகியோரும் உள்ளனர்.
கோயில் முன்புள்ள சரவணப்பொய்கை தீர்த்தத்தில் கைப்பட்டாலே பாவங்கள் நிவர்த்தியாகி விடும் சிறப்புடையது.
பிரார்த்தனை :
குழந்தைகளின் பயந்த சுபாவம் நீங்கவும், திருமணத்தடை, குழந்தை பாக்கியம், கல்வியில் சிறந்து விளங்க இறைவனை பிரார்த்திக்கலாம்.
Comments
Post a Comment