நரசிம்ம ஸ்வாமி திருக்கோயில், நாமக்கல்,

நாமக்கல் மாவட்டத்திலுள்ள நாமக்கல்லிலுள்ள "நரசிம்ம ஸ்வாமி திருக்கோயில்" பற்றிய தகவல்களைக் காணலாம்.   

நரசிம்ம ஸ்வாமி திருக்கோயில், நாமக்கல், நாமக்கல் மாவட்டம், தமிழ்நாடு

பிரதான மூலவர்: நரசிம்ம ஸ்வாமி
பிறபெயர்கள்: கிரிதர நரசிம்மர்
தாயார்: நாமகிரி தாயார்
கோலம்: வீராசன திருக்கோலம் அல்லது அமர்ந்த நிலை
தலமரம்: பலாமரம்
தீர்த்தம்: நாமகிரி தீர்த்தம், கமலாலயம் 

மூலவர்: அரங்கநாதர்
தாயார்: அரங்கநாயகி
கோலம்: அனந்த சயனம் அல்லது கிடந்த நிலை

மூலவர்: வரதர்
கோலம்: நின்ற நிலை 

சிறப்பு:
1. குடவரைக் கோயில். 
2. திருக்கோயில் அமைந்துள்ள திருமலை முழுவதும் சாளக்ராமத்தால் ஆனது.
3. பெருமாளின் மூன்று திருகோலங்களை ஒரே திருத்தலத்தில் மூலவர்களாக தரிசனம் செய்ய இயலும். திருமலையின் அடிவாரத்தில் ரங்கநாதரும், மலை மீது உள்ள கோட்டையினுள் வரதரும் மலை உச்சியில் நரசிம்மரும் அருள்பாலிக்கின்றனர்.
4. அரங்கநாதர் கார்கோடகன் மீது பள்ளிகொண்டிருப்பது சிறப்பு.
5. பிரசித்தி பெற்ற 18 அடி உயரம் கொண்ட நாமக்கல் ஆஞ்சநேயர் இந்த திருமலையையே கரங்கள் கூப்பி நித்தமும் தொழுதுக் கொண்டிருக்கிறார்.  

ஊர்: நாமக்கல், நாமக்கல் மாவட்டம், தமிழ்நாடு, இந்தியா
பிறபெயர்: நாமகிரி
புராணப்பெயர்:  ஆரைக்கல், ஸ்ரீசைல ஷேத்ரம், அதியேந்திர விஷ்ணு கிரகம்

பயண வழிகாட்டல்:
1. கரூரிலிருந்து சுமார் 46 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.
2. கோவையிலிருந்து சுமார் 153 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.

தலவரலாறு:
ஹிரண்யகசிபுவை வதம் செய்த பிறகும் நரசிம்மரின் உக்கிரம் தணியவில்லை. பக்த பிரகலாதனின் வேண்டுகோளுக்கிணங்கி இமய மலையை அடைந்து சாளக்கிராமமாக உருமாறினார். நரசிம்ம அவதாரம் நிறைவுற்ற பிறகும் திருமால் வைகுண்டம் திரும்பாதது குறித்து திருமகள் விசனம் கொண்டாள். திருமாலைத் தேடிக்கொண்டு பூவுலகம் வந்த திருமகள், ஆரைக்கல் திருத்தலத்தில் தவம் மேற்கொண்டாள்.

காலங்கள் உருண்டோடின. இலங்கையில் ஸ்ரீ ராமருக்கும் ராவணனுக்கும் இடையில் தர்ம யுத்தம் நடந்து கொண்டிருந்தது. யுத்தத்தின் அங்கமாக ஸ்ரீ ராமரின் தம்பி இலக்குவனனும் ராவணனின் மூத்த மகன் மேகநாதனும் போர் புரிந்தனர். இருவரும் ஒருவருக்கொருவர் சளைத்தவர் அல்ல. இருப்பினும், வெற்றியை மட்டுமே இலக்காய் கொண்ட மேகநாதன், சக்தி பாணத்தை இலக்குவனன் மீது எய்தான். தாக்குதலுக்குள்ளான இலக்குவனன் போர் களத்தில் மூர்ச்சித்து விழுந்தான். ஆஞ்சநேயர் இலக்குவனனை ஸ்ரீ ராமரிடம் கொண்டுவந்து சேர்த்தார். அனைவர் மனமும் பதைபதைத்தது. இலக்குவனனை காக்கும் மார்க்கம் தெரியாமல் வருந்திய போது, ராவணனின் தம்பி வீடணன் அவ்விடம் வந்தார். வீடணன் தர்மவான். ஆகவே, அதர்மம் புரிந்த ராவணனை நீங்கி, ஸ்ரீ ராமரிடம் தஞ்சம் புகுந்திருந்தார். இலக்குவனனின் நிலையைக் கண்ட வீடணன், அவனைக் காக்கும் மார்க்கம் குறித்த சிந்தனையில் ஆழ்ந்தார். சிறிது நேரத்திற்கு பிறகு, முக மலர்ச்சியுடன் ஸ்ரீ ராமரை நோக்கி, "இலக்குவனனை காக்க ஒரே ஒரு மார்க்கம் மட்டுமே உள்ளது. வைத்தியத்தில் நிபுணரான சுசேனரிடம் இலக்குவனனின் நாடியை பரிசோதித்து பார்ப்பதே அது. இருப்பினும், சுசேனர் ராவணனின் ராஜ வைத்தியர். அவரை இவ்விடம் அழைத்து வருவது என்பது இயலாத காரியம்" என்று கூறினார். மார்க்கம் அறிந்ததால் ஆனந்தம் அடைந்த ஆஞ்சநேயர், சுசேனரை அழைத்து வரும் பொறுப்பு தன்னுடையது என்று கூறி, துரித  வேகத்தில் சென்று, வைத்தியர் சுசேனரை உடன் அழைத்து வந்தார். இலக்குவனனை பரிசோதித்த சுசேனர், இமயமலை சாரலில் இருக்கும் சஞ்சீவி மலையிலுள்ள குறிப்பிட்ட மூலிகைகளை யாராவது கொண்டு வந்தால், தம்மால் இலக்குவனனைக் காப்பாற்ற இயலும் என்று கூறினார். அவர் அறிவுரையின் படி வாயு வேகத்தில் புறப்பட்டு சென்றார் ஆஞ்சநேயர். வைத்தியர் குறிப்பிட்ட மூலிகைகளை கண்டறிய முடியாததால், சஞ்சீவி மலையையே பெயர்த்தெடுத்து வந்து இலக்குவனனின் உயிரைக் காத்தார். அனைத்தும் இனிதே நிறைவேறிய பிறகு, மீண்டும் இமயம் சென்று சஞ்சீவி மலையை சேர்பித்த ஆஞ்சநேயர், அதன் அருகில் இருந்த சாளக்கிராமத்தால் ஈர்க்கப்பட்டார்.

சாளக்கிராமத்தை பிரிய மனம் இல்லாமல், அதனை எடுத்துக்கொண்டு ஆகாய மார்கமாக இலங்கை நோக்கி வந்த ஆஞ்சநேயருக்கு தாகம் எடுத்தது. நீர் அருந்த நிலம் இறங்கிய ஆஞ்சநேயர், தவக்கோலத்தில் இருந்த திருமகளை தரிசனம் செய்தார். தான் நீர் அருந்தி வரும் வரை, சாளக்கிராமத்தை வைத்துக்கொள்ள இயலுமா என பணிவுடன் வேண்டினார். திருமகளும் ஒப்புக்கொள்ள, அவளது திருக்கரங்களில் சாளக்கிராமத்தை ஒப்படைத்து விட்டு நீர் நிலையைத் தேடி சென்றார். சிறிது நேரத்திற்கு பிறகு, பாரம் காரணமாக திருமகள் சாளக்கிராமத்தை நிலத்தில் வைத்து விட்டு, ஆஞ்சநேயரின் வருகைக்காக காத்திருந்தாள். தாகம் தணிந்து திரும்பி வந்த ஆஞ்சநேயர் நிலத்தில் இருந்த சாளக்கிராமத்தை எடுக்க முயற்சித்தார். ஆனால் அவரால் அசைக்கக்கூட முடியவில்லை. மாறாக, சாளக்கிராமம் விஸ்வரூபம் கொண்டு மலையாக மாறியது. வியப்பில் ஆழ்ந்த திருமகளுக்கும் ஆஞ்சநேயருக்கும் திருக்காட்சி அளித்தார் நரசிம்மர். பேரானந்தம் கொண்டாள் திருமகள். தன்னையும் திருமாலையும் இணைத்த ஆஞ்சநேயரை வாழ்த்தி, அவரை அவ்விடம் நித்திய வாசம் செய்யும்படி பணித்தாள். அவ்வண்ணமே, மலையை நோக்கிய வண்ணம் இன்றும் வாசம் செய்துக் கொண்டிருக்கிறார் ஆஞ்சநேயர்.

தலப்பெருமைகள்:
1. வைணவர்களால் புனிதமாக போற்றப்படும் சாளக்கிராமமே நாமகிரியாக மலையாக அமைந்துள்ளது. திருமலையே திருமால். திருமாலே திருமலை. சாளக்கிராமமான நாமகிரி இருமுகங்களைக் கொண்டது. ஒருமுக ருத்திராட்சம் போல இருமுக சாளக்கிராமம் காண்பதற்கு அரிதிலும் அரிது.
2. புராண காலத்தில் தேவசிற்பி மயனால் வடிவமைக்கப்பட்ட ஆதி திருக்கோயில். மலையைக் குடைந்து வடிவமைக்கப்பட்ட, 25 அடி நீளம் கொண்ட குடவரைக் கோயில். பிற்காலத்தில் மகேந்திரவர்மன் என்ற பல்லவ மன்னனால் கட்டுமான பணிகள் மேற்கொள்ளப்பட்டன. அவனுக்குப் பிறகு, தொண்டை மண்டலத்தை ஆண்ட அதியமான் வழிவந்த குணசீலன் என்ற மன்னனால் பெருமளவு கட்டுமான பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இச்செய்தி திருக்கோயிலின் கல்வெட்டில் காணப்படுகிறது.
3. கருவறையில் லட்சுமி நரசிம்மர் மேற்குநோக்கி வீராசன திருக்கோலத்தில் திருக்காட்சி அளிக்கின்றார். வலது திருவடியை நிலம் நோக்கி தாழ்த்தி, இடது திருவடியை மடித்து அமர்ந்துள்ளார். அருகில் சனகாதி முனிவர்கள் உள்ளனர். சூரிய சந்திரர்கள் சாமரம் வீசுகின்றனர். வலப்புறம் சிவனாரும் இடப்புறம் நான்முகனாரும் நரசிம்மரின் உக்கிரத்தை தணிக்க பிரயத்தனம் செய்துகொண்டிருக்கின்றனர். நரசிம்மரின் அபயமளிக்கும் வலது திருக்கரங்களில் உள்ள கூறிய நகங்களில், ஹிரண்யனை வதைத்ததால் ஏற்பட்ட குருதிக் கரையை இன்றும் காணலாம்.
4. லட்சுமி நரசிம்மரின் வலப்புறம் உக்கிர நரசிம்மர் ஹிரண்யனை வதம் செய்யும் கோலத்தில் காட்சி அளிக்கின்றார். உக்கிர நரசிம்மரை அடுத்து வைகுண்ட நாராயணர் அருள்பாலிக்கின்றார். இவருக்கு அருகில் பக்த பிரகலாதனையும் காணலாம். 
5. லட்சுமி நரசிம்மரின் இடப்புறம் லட்சுமி வராகமூர்த்தி காட்சி அளிக்கின்றார். லட்சுமி வராக மூர்த்தியை அடுத்து, மற்றொரு வராக மூர்த்தி அருள்பாலிக்கின்றார்.
6. லட்சுமி நரசிம்மரையே பிரசித்தி பெற்ற நாமக்கல் ஆஞ்சநேயர் தொழுதுக் கொண்டிருக்கிறார். நரசிம்மருக்கு நேர் எதிரில் உள்ள சுவற்றில் உள்ள சிறிய துவாரத்தின் வழியாக ஆஞ்சநேயரை தரிசனம் செய்ய இயலும்.
7. நாமகிரி தாயார் கிழக்கு நோக்கி அருள்பாலிக்கின்றாள். நாமகிரி தாயாரே கணித மேதை ராமானுஜம் கனவில் தோன்றி பல கணித கோட்பாடுகளை அருளி உள்ளாள். இந்த கோட்பாடுகள் இன்றைய கால கணித மேதைகளாலும், ஆராய்ச்சியாளர்களாலும் கண்டறிய முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.                 
8. மலையின் அடிவாரத்தில், ஒருபுறம் நரசிம்மரும், மறுபுறம் அரங்கநாதரும் உள்ளனர். பொதுவாக ஆதிசேஷன் மீதுதான் அரங்கநாதர் பள்ளிகொண்டிருப்பார். மாறாக, இத்தலத்தில் கார்கோடகனின் தவத்திற்கு இணங்கி, மிகவும் உக்கிரமான கார்கோடகன் மீது பள்ளிகொண்டு காட்சி தருகிறார். தெற்கில் சிரம் வைத்து, வடக்கில் திருப்பாதம் நீட்டி சயன நிலையில் காட்சி தருகிறார். திருபாதத்திற்கருகே சங்கர நாராயணர் உள்ளார். அரங்கநாதரை தரிசனம் செய்ய காலை 11 மணிக்குள் செல்ல வேண்டும். அருகிலேயே அரங்கநாயகி தாயார் சன்னதி உள்ளது.
9. அரங்கநாயகி தாயார் சன்னதியிலிருந்து சற்று கீழே சென்றால் கமலாலயம் உள்ளது. இந்த தீர்தத்தையே தாகம் தீர ஆஞ்சநேயர் அருந்தினார்.

Comments

Popular posts from this blog

மதுரை மாவட்டத்தில் உள்ள ஜீவசமாதிகள்

நலம் தரும் நல்வாழ்வு தரும் நான்கு ராமேஸ்வரங்கள்

திருவாஞ்சியம் வாஞ்சிநாதசுவாமி கோயில்